10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம்; அமைச்சர் மா.சுப்பிரமனியன் பேட்டி
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் திடீரென தொற்றின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. நேற்று ஒருநாள் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அந்தத் துறையின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடன் கூறியதாவது;-
கடந்த 2 வாரங்களில் கொரோனா பரிசோதனையானது 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பானது இணை நோய் உள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஆனால் தற்போது நோயின் பரிணாம வளர்ச்சியால் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு குடும்பத்தில் அதிக நபர்கள் இருக்கும் போது அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாக நேர்கிறது.
தற்போது தடுப்பூசி போடப்பட்டு ஓராண்டு ஆகியதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. இதனால் 10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அதுமட்டுமில்லாமல் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அனைவரும் போட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.