`ஜிபே’ மூலம் பணம் வசூல்: சப் இன்ஸ்பெக்டர், 2 போலீசார் பணி இடைநீக்கம்
குமரி மாவட்டம் வழியாக ஏராளமான லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. மார்த்தாண்டம் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் மார்த்தாண்டம் வழியாக உரிய அனுமதி சீட்டு இல்லாமலும், அதிக பாரத்துடனும் கனிமவளம் ஏற்றிக்கொண்டு கேரளா செல்லும் லாரி டிரைவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அனுமதிப்பதாக புகார்கள் எழுந்தன.

அதிலும் கையில் பணம் இல்லை என்று கூறும் டிரைவர்களிடம், ‘ஜிபே’ மூலம் பணம் அனுப்பும்படி அடாவடி வசூலிலும் இறங்கியதாக கூறப்படுகிறது.
இந்த புகார் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் நேரடி கவனத்துக்கு சென்றது. அவர் நேரடி விசாரணையில் இறங்கினார். அப்போது நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஸ்டாலின், ஏட்டு சாலமன், போலீஸ்காரர் சிபு ஆகியோர் பணம் வாங்கிக்கொண்டு லாரிகளை அனுப்பிவைத்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடமையை செய்ய தவறியதாகவும், பொதுமக்களிடம் சட்டவிரோதமாக பணம் பெற்றதாகவும் கூறி சம்பந்தப்பட்ட 3 போலீசாரையும் பணி இடைநீக்கம் செய்து சூப்பிரண்டு ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
இதேபோல் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட 3 பேர் ஜல்லி, மணல் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 3 பேரும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் புதுக்கடை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் மற்றும் 3 பேர் மீது இதுபோன்ற புகார்கள் எழுந்ததால், அவர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.







