வள்ளியூர் அருகே கார்கள் மோதல்; 7 பேர் பரிதாப சாவு
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரத்தை சேர்ந்த தனுஷ்லாஸ் தனது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் மொத்தம் 6 பேருடன் நேற்று மாலை காரில் நாகர்கோவிலுக்கு சென்றார்.
நெல்லை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வள்ளியூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த வந்த கார் தனுஷ்லாஸ் கார் மீது மோதியது.
இதில் இரண்டு கார்களும் நொறுங்கின. கோர விபத்தில் தனுஷ்லாஸ் உள்பட குடும்பத்தினர் 6 பேரும் உடல்நசுங்கி உயிரிழந்தனர். எதிரே வந்த காரில் இருந்த கூடங்குளத்தை சேர்ந்த மெல்கிஸ் (வயது 50) என்பவரும் உயிரிழந்தார். இந்த கார் விபத்தில் மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், நெல்லை கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் அறிவித்தார்.







