தமிழக மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பொதுமக்கள் அவசியமற்ற பணிகளுக்காக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
அதில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே பல மாவட்டங்களிலும் மழைப்பொழிவு காணப்படுகிறது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால்,பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக கடந்த ஆண்டுகளில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முடிந்தவரையிலும் அடுத்த சில நாட்களுக்கு, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வது நன்று. தமிழக அரசு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம்,உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
மேலும், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90% அளவு நிறைவு பெற்றிருப்பதாக அமைச்சர்களும், சென்னை மாநகராட்சி மேயர் அவர்களும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கூறி வருவதால், கடந்த ஆண்டுகளை நினைவில் கொண்டு தண்ணீர் தேங்கி கிடக்கும் சாலைகளில் செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறும் கேட்டு கொள்கிறேன்.
கனமழை இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் அவசியமற்ற பணிகளுக்காக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன். மேலும் மின்சாரம் தொடர்பான பொருள்களை கையாளும்போதும், நீர்நிலைகளிலும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.நீர் நிலைகளில் இறங்க முற்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். பருவமழையைப் பாதிப்பின்றி எதிர்கொள்வோம். என்று தெரிவித்துள்ளார்.







