மக்களவையில் திமுக உறுப்பினர்களுக்கு தனியாக இருக்கை வசதி; சபாநாயகருக்கு கனிமொழி கடிதம்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, மக்களவையில் திமுக உறுப்பினர்களுக்குத் தனியாக இருக்கை வசதி ஒதுக்கித் தர வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் உடனான கூட்டணி முடிவுக்கு வந்துள்ள நிலையில், மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அருகிலேயே திமுக உறுப்பினர்கள் அமர்வது இனி பொருத்தமாக இருக்காது என்று அக்கடிதத்தில் கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் அவசியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள திமுக, இனி வரும் காலங்களில் தனது கருத்துக்களைச் சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் முன்வைக்க விரும்புகிறது.திமுக உறுப்பினர்கள் தங்கள் நாடாளுமன்றப் பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றவும், தங்குதடையின்றிச் செயல்படவும் ஏதுவாகத் தனி இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள சூழலில், திமுக தனித்துத் தனது அரசியல் நிலைப்பாட்டை அவையில் வெளிப்படுத்த இந்த இருக்கை மாற்றம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.நீண்ட காலமாகத் தேசிய அளவில் வலுவான கூட்டணியாகப் பார்க்கப்பட்ட திமுக – காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாகப் பிரிந்திருப்பது தேசிய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக-உடன் காங்கிரஸ் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ள நிலையில், திமுக தனது தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மக்களவை சபாநாயகர் இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.







