தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர வேண்டும்; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு
சென்னை திரு வி க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக பாககிளை கழக நிர்வாகிகள் வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு வருகிற தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஜெயக்குமார் ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:-
நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை விட பெரிய சக்தி இது ஒன்றுமே கிடையாது. மே மாதத்தில் திமுக கட்சியின் இடுப்பை உடைத்து உட்கார வைப்போம். திமுக ஒரு தடவை ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஆட்சிக்கு வராது, அதுதான் திமுகவின் ராசி.
வேங்கை வயல் சம்பவம் புரியாத புதிராக இன்றளவும் உள்ளது. தென் மாவட்டங்களில் பள்ளிகளில் சாதிய சீர்கேடு உள்ளது. ஆதிதிராவிட மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல்துறையினர், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
ஷாக் அடிக்க சுவிட்சில் கை வைக்க தேவையில்லை, மாதமாதம் கரண்ட் பில்லில் கை வைத்தாலே ஷாக் அடிக்கும் நிலை உள்ளது, விலைவாசி உயர்ந்துவிட்டது.

என்ன தவறு செய்தாலும் அரசாங்கமோ, காவல்துறையோ நடவடிக்கை எடுக்காது என்ற எண்ணத்தில் திமுகவினர் தவறு செய்கிறார்கள்.தலைமைச் செயலகத்தில் அமர்ந்து 10 ஆயிரம் கிராம மக்களிடம் பேசுவதாக முதல்வர் கூறுகிறார், ஆனால் கிராமங்களில் தேனும் பாலும் ஓடவில்லை, கிராமங்களில் குடிநீர், சாலை, கழிப்பிட வசதி இல்லை. கொஞ்சம் கூட முகம் கூசாமல் ஆட்களை செட் செய்து கிராமங்கள் சிறப்பாக செயல்படுவதாக பேச வைத்துள்ளார் ஸ்டாலின்.
சாலை, நகரமென எல்லா இடங்களில் காரி துப்புகிறார்கள் வடிவேலு போல எவ்வளவு தான் காரி துப்பினாலும் துடைத்துக் கொண்டு திமுகவினர் செல்கிறார்கள்.
கேரள முதலமைச்சர் மிகவும் எளிமையாக உள்ளார், ஆனால் நம் முதலமைச்சர் மேக்கப் போட்டுக் கொண்டு பெண் பார்க்க வர மாதிரி வருகிறார். முதலமைச்சருக்கான கான்வெயில் 40 கார்கள் செல்கின்றன. திமுகவினரால்தான் தமிழக மக்களுக்கு அச்சம்.
பல துறைகளில் கமிஷன் என பல்லாயிரம் கோடி ரூபாய் வைத்துள்ளார்கள். இதையெல்லாம் தேர்தலில் வாரி இறைத்தாலும் திமுக தேர்தலில் தேறாது. மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்ப ரெடியாகிவிட்டார்கள்.

ஒரு குடும்பத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழலில் சொத்து சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.
வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கை வைத்த நரகாசுரன் ஒழிந்த நாள் தீபாவளி திருநாள், அதேபோல வரம் கொடுத்த மக்களை ஏமாற்றிய நரகாசுர ஆட்சியை ஒழித்து மீண்டும் அம்மாவின் ஆட்சி தமிழ்நாட்டில் மலர வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பேசினார்.







