தூத்துக்குடிக்கு ரெயிலில் வந்த 400 டன் யூரியா உரம்: 38 கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ராபி பருவசாகுபடிக்கு தேவையான யூரியா உரங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இப்கோ நிறுவனத்தால் குஜராத் மாநிலத்தில் இருந்து 1320 டன் யூரியா உரம் ரெயில் மூலம் தூத்துக்குடி மீளவிட்டான் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த உரத்தில் 1050 டன் யூரியா தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு சங்கங்களுக்கும், 270 டன் தனியார் உரக்கடைகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 38 கூட்டுறவு சங்கங்களுக்கு 400 டன் யூரியா அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 400 டன் யூரியா, 4 ஆயிரத்து 420 டன் டி.ஏ.பி, 3 ஆயிரத்து 520 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 560 டன் பொட்டாஷ் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் நடப்பு ராபி பருவ உரத் தேவையை கருத்தில் கொண்டு அரசு தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக 52 ஆயிரம் டன் யூரியா, 53 ஆயிரம் டன் டி.ஏ.பி மற்றும் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் 50 ஆயிரம் டன் பொட்டாஷ் உரங்களை உர நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்து மூட்டைகளில் அடைத்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.

எனவே மாவட்டத்தில் போதுமான உரம் கையிருப்பில் உள்ளதால் விவசாயிகள் தேவைக்கேற்ப உரங்கள் வாங்கி பயன்படுத்தலாம். உரம் வாங்கும் போது தங்கள் ஆதார் எண் கொண்டு விற்பனை முனையக் கருவியில் பில் போட்டு வாங்க வேண்டும் மேற்கண்ட தகவல்களை வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.







