வைகையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட் கிளை
வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என மதுரை மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சிவகங்கையை சேர்ந்த சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை செழிக்க வைக்கிறது. சிவகங்கை ஆதனூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வருகின்றன. ஆதனூர் கண்மாயின் கொள்ளளவு 22.87 மில்லியன் கன அடி ஆகவும், பாசன பரப்பு 220.49 ஏக்கர் ஆகவும் உள்ளது.
வைகை ஆற்றில் இருந்து நீர் திறந்து ஆதனூர் கண்மாய்க்கு விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் சேமித்து வைக்கப்படும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அரசுத்தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
அதில், மதுரை வைகை கரையோரம் மாநாகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. குடியிருப்போர்கள் வைகை ஆற்றில் கழிவுகளை கொட்டி செல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், வைகை ஆற்றில் வாகனங்கள், பைக்குகளை நிறுத்தி சுத்தம் செய்கின்றனர். குப்பைகளை கொட்டுகின்றனர் என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்று நீரை மாசுபடாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நகர் பகுதியில் வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என மதுரை மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.







