கோவில்பட்டியில் அனுமதியின்றி தொடங்கிய பொழுதுபோக்கு பொருட்காட்சியை நடத்த அதிகாரிகள் தடை
பாண்டிச்சேரியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் பாண்டிச்சேரி, தமிழகத்தில் பொருட்காட்சி நடத்தி வருகிறார். இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொருட்காட்சி நடத்துவதற்கு திட்டமிட்டு மந்திதோப்பு சாலையில் உள்ள தனியார் சர்க்கஸ் மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதில் ராட்டினங்கள், ரோபோடிக் பறவைகள், ஜம்பிங் பலூன், பப்லோ ரைட் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை அமைத்திருந்தார்.
மேலும் ஜூலை 15-ம் தேதி (நேற்று )முதல் 30-ம் தேதி வரை 16 நாட்கள் பொருட்காட்சி நடைபெறும் என கோவில்பட்டி நகர் பகுதி முழுவதும் விளம்பரங்கள் செய்யப்பட்டது. அதேபோல் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டும் இலவச டிக்கெட்களையும் வழங்கி உள்ளனர். இந்நிலையில் அறிவித்தபடி நேற்று மாலை 6 மணிக்கு பொருட்காட்சி தொடங்கியது.

அப்போது கோட்டாட்சியர் ஜெயா, வட்டாட்சியர் லெனின் மற்றும் நகராட்சி, காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். அங்கிருந்த பொறுப்பாளர்களிடம் கோட்டாட்சியர் ஜெயா விசாரணை நடத்தினார்.
அப்போது பொருட்காட்சி நடத்துவதற்கு எந்தவித அரசுத் துறையிலும் அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து பொருட்காட்சியில் இருந்த டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடனடியாக அங்கிருந்த மக்களை வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். மேலும் முறையான அனுமதி பெற்று பொருட்காட்சியை நடத்த வேண்டும் என தெரிவித்து அதுவரை பொருட்காட்சி திடலை திறக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் பொருட்காட்சியை குழந்தைகளுடன் காண வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.







