தீபாவளி ஜோர்: எட்டயபுரம் சந்தையில் ரூ. 7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து குறிப்பாக தேனி, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதும் விற்பதும் வழக்கம்.
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் அதிகாலை முதலே கூட்டம் களைகட்டி விற்பனை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்தது. ஒவ்வொரு ஆடும் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரங்களை விட விலை சற்று குறைவாக இருந்ததாலும் நாளை மறுநாள் தீபாவளி என்பதாலும் விற்பனை அமோகமாக இருந்தது. கடந்த ஆண்டு ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையான நிலையில் இந்தாண்டு ரூ.7 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.







