கள்ளக்காதலால் விபரீதம்:காதலனுடன் சேர்ந்து மாமியாரை கொன்ற மருமகள்
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள செவ்வாத்தூர் புதூர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராமரோஜா (வயது 58). இவர்களுக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக உள்ளார். இதனால் எழுமலை மனைவி அம்சா (வயது 31) , தனது 10 மாத குழந்தையுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்வராஜ் இரவு பணிக்கு சென்றுவிட்டார். திண்ணையில் படுத்து தூங்கிய அவர் மனைவி ராமரோஜா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில், கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சென்னையில் வேலை பார்க்கும் அம்சாவின் கணவர் பெரும்பாலும் சென்னையிலேயே இருப்பார். இதனை சாதகமாக பயன்படுத்திய அம்சாவுக்கும், கட்டிட மேஸ்திரி கார்த்திகேயனுக்கும் (21) இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதை அறிந்ததும் அம்சாவை அவரது மாமியார் ராமரோஜா கண்டித்துள்ளார்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அம்சாவுடன் கார்த்திகேயன் மற்றும் 17 வயது வாலிபர் ஆகியோர் சேர்ந்து ராமரோஜாவை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன,
அம்சாவும், கார்த்திகேயனும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர் துணிக்கடையில் வேலை பார்த்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அம்சா திருமணமாகி புதூர் சென்றுவிட்டார். அம்சாவின் கணவர் சென்னை சென்றுவிட்டதால் அவர் தனியாக இருந்த போது அவரது வீட்டுக்கு கார்த்திகேயன் சென்று வந்துள்ளார். இந்த கள்ளக்காதல் விவகாரம், மாமியார் ராமரோஜாவுக்கு தெரியவந்தது, அடிக்கடி யாரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் என அம்சாவை கண்டித்துள்ளார்.
இதனால் அவரை தீர்த்து கட்டுவது என அம்சாவும், கார்த்திகேயனும் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 29-ந்தேதி மாமனார் செல்வராஜ் இரவு வேலைக்கு சென்றுவிட்டார். இதுகுறித்து அம்சா, செல்போனில் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்து அங்கு வரவழைத்தார். இதனையடுத்து அவர் 17 வயது வாலிபருடன் அங்கு வந்தார். கார்த்திகேயன் மற்றும் 17 வயது வாலிபர் பின்பக்கமாக சென்று ராமரோஜாவின் வாய் மற்றும் மூக்கை மூடியதால் அவர் மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக துப்பட்டாவில் அம்சாவும், கார்த்திகேயனும் சேர்ந்து ராமரோஜாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
அதன்பின் கொலை செய்யப்பட்ட ராமரோஜாவை வீட்டுக்கு முன்பு படுக்க வைத்தது போல் போட்டு விட்டு விட்டு கார்த்திகேயனும், 17 வயது வாலிபரும் சென்றுவிட்டனர். மறுநாள் காலை அம்சா ஒன்றும் தெரியாதது போல் மாமியாரை யாரோ கொலை செய்து விட்டனர் என்று கூறி நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து அம்சா, கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 17 வயது வாலிபரை செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரும் இது பற்றி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.