குழந்தையிடம் நகை திருடிய பூசாரி சிக்கினார்
கோவில்பட்டி ஆலம்பட்டி பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் எட்டையாபுரம் கடலையூரை சேர்ந்த அய்யாத்துரை மனைவி முனீஸ்வரி (வயது 28) என்பவர் தனது குழந்தைக்கு காது குத்துவதற்காக வந்தார். அப்போது கோவிலில் வைத்து அவரது குழந்தை அணிந்திருந்த 3¼ சவரன் தங்க நகை திருட்டு போனது.
இதுகுறித்து முனீஸ்வரி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அக்கோவிலில் பூசாரியாக உள்ள சுப்பிரமணியன் (61) என்பவர் முனீஸ்வரி குழந்தையிடமிருந்து தங்க நகையை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் அரிகண்ணன் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்து அவரிடமிருந்து, திருடப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான 3¼ சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.