பா.ஜனதாவில் இணைந்ததாக கூறப்பட்ட 13 ஊராட்சி மன்ற தலைவர்கள், கனிமொழி எம்.பி.யுடன் சந்திப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 ஊராட்சி மன்ற தலைவர்கள் பா.ஜனதா கட்சியில் இணைந்ததாக சமீபத்தில் வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கட்சியில் இணைந்ததாக கூறப்பட்ட 13 பஞ்சாயத்து தலைவர்கள் நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்தனர். அப்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர்கள் கூறும் போது, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் தொடர்பாக மனு கொடுக்க சென்றவர்களை பா.ஜனதா கட்சியில் இணைந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர் என்று தெரிவித்தனர்.