கோவில்பட்டி லாரி செட்டில் தடை செய்யப்பட்ட பேப்பர் கப்புகள் ; உரிமையாளருக்கு அபராதம்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப்புகள் கோவில்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாகவும் அவற்றை டீ கடைக்காரர்கள் வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் கோவில்பட்டி நகராட்சி ஆணையாளருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் காஜா நஜிமுதீன் தலைமையில் ஒரு குழுவினர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள லாரி செட்டுகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு லாரி செட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 1 லட்சத்து 25 ஆயிரம் எண்ணிக்கையிலான அரசால் தடை செய்யப்பட்ட, ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பேப்பர் கப்புகள், பெரிய அட்டை பெட்டிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவை மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் இதனை அனுப்பி வைத்தவரின் முகவரியும் இல்லை. பெறுநர் முகவரியில் முத்துக்குமார் கோவில்பட்டி என்று மட்டும் இருந்தது. இதையடுத்து அந்த பேப்பர் கப்புகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பேப்பர் கப்புகளை நகராட்சி ஆணையாளர் ராஜாராம், சுகாதார அலுவலர் நாராயணன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் லாரி செட் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.