• June 6, 2025

டாக்டர் ராமதாசுடன்  குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்திப்பு; பரபரப்பு தகவல்கள்

 டாக்டர் ராமதாசுடன்  குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்திப்பு; பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு இப்போதே அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த சட்டசபை (2021) தேர்தலில் இதே கூட்டணியில் பா.ம.க.வும் இடம் பெற்றிருந்தது. ஆனால், தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே இருந்த முரண்பாடு சமீபத்தில் மோதலாக வெடித்தது.

இந்த நிலையில், இன்று காலை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்ற அன்புமணி, தனது தந்தை ராமதாசை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அதில், உடன்பாடு ஏற்பட்டதா?, இல்லையா? என்ற தகவல் வெளியாவதற்கு முன்பு, அ.தி.மு.க.வை சேர்ந்த சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினார்கள்.

ஏற்கனவே, மத்திய மந்திரி அமித்ஷா சென்னை வந்தபோது, ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தியை சுமார் 1 மணி நேரம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகுதான் பா.ஜ.க. – அ.தி.மு.க. இடையே கூட்டணி உறுதியானது. அதேபோல், ராமதாசை சந்தித்து குருமூர்த்தி பேசியதன் மூலம் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வும் இணையும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த (2024) நாடாளுமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் இணைய விருப்பப்பட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ராமதாஸ் தெரிவித்தார். ஆனால், அன்புமணி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார். இதனால்தான் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் உருவானது.

ஆனால், இப்போது அந்த 2 கட்சிகளும் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், அதில் பா.ம.க.வும் இணைவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது. இதுகுறித்துதான், ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசிடம் பேசியதாக தெரிகிறது.

மேலும், தந்தை – மகன் இருவருக்கு இடையேயும் உள்ள பிணக்கை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. மத்திய மந்திரி அமித்ஷா வரும் 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வர இருக்கிறார். அன்று மாலை 4 மணிக்கு ஒத்தக்கடை அருகே பிரமாண்டமாக நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்க இருக்கிறார். எனவே, அதற்கு முன்னதாக பா.ம.க.வை வழிக்கு கொண்டுவரவே இந்த முயற்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

முதலில் பா.ம.க. உட்கட்சி பூசல் முடிவுக்கு வரவேண்டும், அதன் பிறகே ஒத்தக் கருத்துடன் கூட்டணி முடிவை இருதலைவர்களும் எடுக்க முடியும் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *