நகைக்காக சிறுவனை கொன்று உடலை பீரோவில் மறைத்து வைத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை : கணவருக்கு 3 வருடம் சிறை

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜான் ரிச்சர்டு. சவுதி அரேபியாவில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டார். இவருடைய மனைவி சகாய சில்ஜா (வயது 28).
இந்த தம்பதியின் மகன் ஜோகன் ரிஷி (4). கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ந் தேதி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தான்.திடீரென காணாமல் போய் விட்டான். இது பற்றி அறிந்த சகாய சில்ஜா, மகனை அந்த பகுதி முழுவதும் தீவிரமாக தேடினார்.. ஆனால் சிறுவனை பற்றி எந்தவொ தகவலும் இல்லை.

இதுகுறித்து சகாய சில்ஜா மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாயமான சிறுவன் 1 பவுன் தங்க சங்கிலி, அரை பவுன் கைச்சங்கிலி மற்றும் வெள்ளியில் அரைஞாண் கயிறு அணிந்திருந்தான்.
இதனால் நகைக்காக யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா (35) என்ற பெண் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவரை போலீசார் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அவரது கணவர் சரோபினிடமும் (37) விசாரணை நடத்தப்பட்டது. கொண்டு வரப்பட்டார். முதலில் பாத்திமா முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர்.
அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. நகைக்காக சிறுவனை கொன்று உடலை வீட்டு பீரோவில் மறைத்து வைத்த கொடூர சம்பவம் பற்றி தெரிய வந்தது.

உடனே போலீசார் பாத்திமா வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு பீரோவை திறந்து சிறுவனின் உடலை மீட்டனர். சிறுவனின் கழுத்தில் காயம் இருந்தது. வாயில் துணி அமுக்கப்பட்ட நிலையிலும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது.
சிறுவன் சத்தமிடக்கூடாது என்பதற்காக வாயில் துணியை திணித்து கழுத்தை நெரித்துக் பாத்திமா கொன்றது, இதன் மூலம் தெரியவந்தது. மேலும் சிறுவனின் நகையை எடுத்த பாத்திமாக அதை அடகு வைக்கவும் சென்றது விசாரணையில் அம்பலமானது.

இந்த வழக்கில் பாத்திமா மற்றும் அவரது கணவர் சகாய சரோபின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாத்திமா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதே சமயத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2½ ஆண்டுகளாக தக்கலை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி ராமச்சந்திரன் தீர்ப்பளித்தார். அதில் குற்றவாளி பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கொலையை மறைக்க உதவிய அவரது கணவர் சகாய சரோபினுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜெகதேவ் ஆஜராகி வாதாடினார்.
