வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு வதந்திகளை நம்ப வேண்டாம்: ஆட்சியர் விஷூ மகாஜன்
தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வரும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாவட்டத்தில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களிலும் வீட்டுத் தேவைக்கான சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. விநியோகத்தில் எவ்விதத் தாமதமோ அல்லது குறைபாடோ இல்லை. எனவே, பொதுமக்கள் அவசரகதியில் (Panic Booking) சிலிண்டர்களை முன்பதிவு செய்யத் தேவையில்லை.

எரிவாயு விநியோக நிறுவனங்கள் தங்களின் வழக்கமான பணிகளைத் தடையின்றி மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். எரிவாயு விநியோகம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் அல்லது குறைகள் இருந்தால் பின்வரும் வழிகளில் தொடர்பு கொள்ளலாம்:
சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவன அலுவலகங்கள்.
மாவட்ட வழங்கல் அலுவலக எண்: 0461-2341471.
இயற்கை எரிவாயு (PNG) இணைப்புக்கு அழைப்பு
தூத்துக்குடி வட்டத்தில், குறிப்பாக முத்தையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு மாற்றாக PNG (Piped Natural Gas) எனப்படும் குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு இணைப்பைப் பெற முன்வர வேண்டும். இதற்குரிய வழிமுறைகளில் விண்ணப்பித்து, கூடுதல் பலன்களைப் பெறலாம்,
இவ்வாறு ஆட்சியர் விஷூ மகாஜன் கூறி உள்ளார்,








