கோவில்பட்டியில் சிறுவன் வெட்டிக் கொலை:உறவினர்கள் சாலை மறியல்
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த திருப்பதி மகன் மனோஜ்குமார் (வயது 17). நேற்று இரவு மனோஜ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் அவர்களை நோக்கிப் பாய்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த கொடூர காட்சியை பார்த்து அங்கிருந்தவர்கள் தப்பியோடினர்., மனோஜ் தடுமாறிக் கீழே விழுந்து விட்டார். விரட்டி வந்தவர்கள் மனோஜை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்,
ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மனோஜின் மரணச் செய்தி கேட்ட அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். மேலும் அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் கண்டு, கைது செய்யக்கோரி இன்று காலை கோவில்பட்டி-சாத்தூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன், கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். “குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்துச் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மனோஜ்குமாரின் நண்பர் பூவரசனுக்கும், ஹரீஷ் என்பவருக்கும் இடையே பள்ளிப் பருவத்தில் படிக்கும்போது வாய்த்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதத்தின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு, அது கொலையில் முடிந்துள்ளதாகத தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய, தப்பியோடிய 4 பெரும் மைனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை பிடிப்பதற்கான முயற்சியில்போலீசார் ஈடுபட்டுள்ளனர்.







