நல்லக்கண்ணு மறைவு : முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்; முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல்
Oplus_16908288
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தகைசால் தமிழருமான தோழர் ஆர். நல்லகண்ணு மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: –
“எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது; அதுதான் நல்லகண்ணு” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்ட மாபெரும் தலைவர் மறைவுற்ற செய்தி கடும் துயரத்தை அளிக்கிறது. நாட்டின் விடுதலைக்காகவும், பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காகவும் தனது வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர் அவர்.
கொள்கை உறுதி குலையாத குன்று: தோழர் ஜீவாவின் முழக்கத்தைப் போல, எத்தனை சிறைவாசங்கள் மற்றும் சித்திரவதைகள் வந்தாலும் கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்றவர். அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில் கலைஞர் அவர்களுடன் தோளோடு தோள் நின்று களமாடியவர். பொதுவுடைமை மற்றும் திராவிட இயக்கக் கருத்தியல்கள் சமூக மாற்றத்திற்கான ‘இரட்டைக்குழல் துப்பாக்கி’ என்பதில் உறுதியாக இருந்தவர்.

அரசு மரியாதை: முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் ‘அம்பேத்கர் விருது’ பெற்றவர். நமது திராவிட மாடல் அரசின் சார்பில் ‘தகைசால் தமிழர்’ விருதை அவருக்கு வழங்கியதை எனது வாழ்வின் பெரும் பேறாகக் கருதுகிறேன். தான் பெற்ற விருதுத் தொகைகள் அனைத்தையும் கட்சிக்கும், மக்கள் நலனுக்கும் வழங்கிய அப்பழுக்கற்ற தலைவர் அவர்.
பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த அந்த மாமனிதருக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விட்டுச் சென்ற வாழ்வியல் செய்தியே நமக்கு வழிகாட்டும் ஒளியாக அமையும்.”
இவ்வாறு மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







