அதிமுக கூட்டணியில் புதிய கட்சி இணைகிறது; எடப்பாடி பழனிசாமியுடன் தனியரசு சந்திப்பு
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, வரும் 23ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற பாஜக தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியிலும் அந்தக் கட்சி இறங்கியுள்ளது. இந்த நிலையில், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, எடப்பாடி பழனிசாமியை இன்று திடீரென சந்தித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் மு.க.ஸ்டாலினை தனியரசு சென்னை அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது, சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட தனியரசு விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதேபோல், தனது பேட்டிகளிலும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த சூழலில்தான், திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிசாமியை தனியரசு சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தனியரசு, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2016 சட்டசபை தேர்தலில் தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, அதிமுகவுடன் கூட்டணி வைத்து காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டது. இதில் வெற்றி பெற்று தனியரசு எம்.எல்.ஏ ஆனார்.







