ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை அபேஸ்; தூத்துக்குடி பெண்கள் 2பேர் சிக்கினர்
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவருடைய மனைவி சேசம்மாள் (வயது 75). இவர் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் மீண்டும் ஊருக்கு புறப்பட்டார். இதற்காக அவர் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து கொல்லங்கோடு செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.
அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சேசம்மாள் கூட்டத்தின் நடுவே நின்று கொண்டிருந்தார். அந்த பஸ் வில்லுக்குறி பாலம் அருகே சென்றபோது, தான் அணிந்திருந்த 2½ பவுன் நகை மாயமாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் அவர் பஸ்சை நிறுத்துமாறு சத்தம் போட்டார். உடனே, பஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து பஸ் முழுவதும் நகையை தேடினார். ஆனால், கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் 2 பெண்கள் பஸ்சில் இருந்து இறங்கி நைசாக தப்பி செல்ல முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த மற்ற பயணிகள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர். தொடர்ந்து அவர்களை சோதனை செய்தபோது மூதாட்டியின் 2½ பவுன் தங்க சங்கிலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் மூதாட்டியிடம் இருந்து நகையை பறித்தது உறுதியானது.
இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், அந்த 2 பெண்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.அவர்கள், தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த பவானி (29), மீனாட்சி (29) என்பது தெரிய வந்தது.
இவர்கள் மீது ஏற்கனவே குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தக்கலை சிறையில் அடைத்தனர்.







