கரூர் கூட்ட நெரிசல்: விஜய் பிரசாரத்துக்கு எப்படி அனுமதி அளித்தீர்கள்.? மதுரை ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 7 பேர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்கியது.
அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுக்கள் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது நீதிபதிகள் அரசு தரப்பிடமும், தவெகவிடமும் சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளனர். அதன் விபரம் வருமாறு;
“மாநில நெடுஞ்சாலையில் எவ்வாறு அனுமதி வழங்கினார்கள்?
விஜய் பரப்புரைக்கு அனுமதி கொடுத்ததற்கான கடிதம் எங்கே?
விஜய் பரப்புரைக் கூட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா? குடிநீர், சுகாதார வசதிகளை சட்டம் ஒழுங்கு காவலர்கள் கண்காணித்தார்களா?
இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.
இதற்கு அரசு தரப்பு வக்கீல் கூறும்போது; “அனுமதிக்கப்பட்ட இடத்தில் உரிய அனுமதி பெற்றுதான் கூட்டம் நடத்தினார்கள். தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் நடத்தப்படவில்லை. கூட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் அனுமதி அளிக்கப்பட்டது. சாலையின் வடக்கேதான் அனுமதி வழங்கப்பட்டது.” என்றார்.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், ” பொதுக்கூட்டங்களில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்து தருவது அவசியம். பொதுமக்களின் நலனே பிரதானம்.
பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்த மனு, சென்னை அமர்வில் நிலுவையில் உள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அதை பாதிக்கும். அந்த மனுவுடன் இவற்றையும் சேர்த்து இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்யுங்கள்” என உத்தரவிட்டனர்..
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “மனுதாரர் பாதிக்கப்பட்டவரா? போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றலாம். வழக்கை முதற்கட்ட விசாரணையில் இருக்கும் நிலையில், ஏன் சிபிஐ விசாரணை கோருகிறீர்கள் எனக்கூறியதுடன், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் எனவும் காட்டமாக தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கரூர் கூட்ட நெரிசலில் இழப்பீடு தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் இதனை மனுவாக தாக்கல் செய்யவும், 2 வாரங்களில் விஜய் மற்றும் அரசுத் தரப்பு இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரூர் துயரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு, இழப்பீடு அதிகரித்து வழங்க வேண்டும் மற்றும் ஒரே நாளில் உடற்கூராய்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் என மொத்தம் 4 வழக்குகளை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.







