ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிக்கினர்
கோவில்பட்டி மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோவில் அருகே போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரை பார்த்ததும் நிற்காமல் ஒரு மினி சரக்கு வாகனம் அதிவேகமாக சென்றது.

இதனை பார்த்த போக்குவரத்து காவலர் அருண் விக்னேஷ் , அந்த சரக்கு வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து பார்த்த போது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திக் செல்லப்படுவது தெரியவந்தது. இதையெடுத்து அவர் அந்த வாகனம் மற்றும் வாகனத்தில் வந்தவர்களை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் விசாரணை நடத்தியதில் மினி சரக்கு வாகனத்தில் இருந்தவர்கள் உக்கிரன் கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 28), மானூர் மாவடியை சேர்ந்த மகாராஜா (36) என்பது தெரியவந்தது., அவர்கள் சரக்கு வாகனத்தில் 45 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் கைதான இருவரிடம் மேல் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரேஷன் அரிசி கடத்தலில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது. இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் விவரம் பற்றி துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.







