கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 1008 கஞ்சி கலயம், தீச்சட்டி ஊர்வலம்


கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.
அதிகாலையில் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மகளிர் 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து உலகம் சமாதானம் வேண்டியும், மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், வைரஸ் தொற்றுநோய் நோய் நீங்கி, அனைத்து மக்களும் நலமுடன் வாழவும் அன்னையிடம் வேண்டி மாபெரும் 1008 கஞ்சிக்கலயம், 26 அக்கினிசட்டி, 56 முளைப்பாலிகை ஏந்தி ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது.
ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் ஆன்மிக ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.

ஊர்வலம் மந்தித்தோப்பு ரோடு, எட்டயபுரம் ரோடு ,மாதாங்கோவில் ரோடு, தெற்கு பஜார், செண்பகவல்லி அம்மன் கோவில் வழியாக மன்றம் வந்தடைந்தது. பக்தர்கள் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதனையடுத்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் தளவாய்புரம் மன்ற தலைவர் ராஜ், கழுகுமலை மன்ற தலைவர் அழகர், இந்திராநகர் மன்ற பொருளாளர் அழகு மாணிக்கம், மன்ற செயலாளர் வரலெட்சுமி, பொருளாளர் கற்பகவள்ளி, தகவல் தொழிநுட்ப பொறுப்பாளர் கோபிநாத், விஸ்வராஜ், ராஜலெட்சுமி, காசியம்மாள், ராதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.







