கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தலில் கைதானவர், கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு
கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க உணவு பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவில்பட்டி, மாதாங்கோவில் ரோடு, கிருஷ்ணன் கோவில் ஜங்ஷனில் ஒரு மினி லாரியில் 40 மூட்டைகளில் சுமார் 2,000 கிலோ (2 டன்) ரேசன் அரிசியை கடத்திய வழக்கில் கோவில்பட்டி, ஊரணி 1வது தெருவைச் சேர்ந்த லுக்காஅசாரியா மகன் முத்துமாரியப்பன்(எ) சின்னமாரி (வயது 33) என்பவர் 16.7.2025 அன்று கைது செய்யப்பட்டார்.

அவரை கள்ளச்சந்தை தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க மதுரை தென் மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பி. சீனிவாசபெருமாள் அறிவுரையின் பேரில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், 1.8.2025 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து பொது விநியோகத்திட்ட அரிசியை கள்ளச்சந்தையில் பதுக்கும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் கள்ளச்சந்தை தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.







