கோவில்பட்டி கல்லூரியில் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாடு


தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் திருநெல்வேலி மண்டல அளவிலான வானவியல் மற்றும் வின்வெளி அறிவியல் இளைஞர் மாநாடு கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் 17 வயது முதல் 22 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடம் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் 10 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலங்களிலும் ஆய்வுக் கட்டுரை,போஸ்டர்கள் தயாரிப்பு,குறும்படம் தயாரிப்பு,போட்டோகிராபி,அஸ்ட்ரோ விளையாட்டுகள் உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் இளைஞர்களை ஈடுபட செய்து அதில் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து மாநில அளவிலான இளைஞர் மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அந்த வகையில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மண்டல அளவிலான மாநாடு நடத்தப்பட்டது.
தொடக்க நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் உதயன் தலைமை தாங்கினார், கல்லூரி செயலாளர் கண்ணன்,முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி அனைவரையும் வரவேற்றார்.
மண்டல அளவிலான வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டினை நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர்.எஸ் ரமேஷ் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்து பேசினார்.
ரோட்டரி மாவட்டம் 3212 ன் முன்னாள் ஆளுநர் முனைவர் ஷேக்சலீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசினை வழங்கி பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் தலைவர் பேராசிரியர் ஜான்பிரின்ஸ்,செயலாளர் முத்துமுருகன்,அரசு மாதிரி பள்ளி கருத்தாளர்கள் ஜெகநாத்,ராஜ செல்வி,கல்லூரி பேராசிரியை பிரியங்கா,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
66 மாணவர்கள் கொண்ட 33 குழுக்கள் பங்கேற்றதில் 50 மாணவர்கள் கொண்ட 25.குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு ஆகஸ்ட் 15,16,17 தேதிகளில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
மாநாடு முடிவில் அரசு மாதிரி பள்ளி கருத்தாளர் ரம்யா நன்றி கூறினார்.







