திருச்செந்தூர் வரை `வந்தே பாரத்’ ரெயிலை இயக்கும் திட்டம் தற்போது இல்லை; ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் காத்திருக்கும் அறை, மாற்றுத்திறனாளி பயணிகள் காத்திருக்கும்- தங்கும் அறைகள், மின்தூக்கி, இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்தம், நவீன சுகாரதார வளாகம், வாட்டர் கூலர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன்.
இப்ப பணிகளை நேற்று ஆய்வு செய்த தென்னக ரெயில்வே பொது மேலாளர்ஆர்.என்.சிங், திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தோம். அப்பணிகள் 60 சதவீதத்திற்கு மேலாக நிறைவு பெற்றுள்ளன. அதில் குளிர்சாதன காத்திருப்போர் அறைகளில் சில மாற்றங்கள் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திட்டப் பணிகள் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் நிறைவுற்று பயன்பாட்டுக்கு வரும். திருச்செந்தூர்- திருநெல்வேலி வரையிலான நிலையங்களில் நடைபெற்று வரும் நடைபாதை விரிவாக்க பணிகள் நிறைவுற்றதும் செந்தூர் அதிவிரைவு ரெயிலில் (திருச்செந்தூர்- சென்னை) 24 பெட்டிகள் இணைக்கப்படும். திருச்செந்தூர்- பாலக்காடு விரைவு ரெயிலிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.

வந்தே பாரத் ரெயிலை திருச்செந்தூர் வரை இயக்குவதற்கான திட்டமோ, திருச்செந்தூர்- தூத்துக்குடிக்கு புதிய ரெயில் வழித்தடம் அமைப்பதற்கான திட்டமோ தற்போது இல்லை. அதேவேளையில், திருச்செந்தூர்-சென்னைக்கு நேரடி ரெயில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு ஆர். என். சிங் தெரிவித்தார்.
ஆய்வின்போது, மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்ஸவா, கோட்ட மூத்த வணிக மேலாளர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.







