காசோலை மோசடி வழக்கில் தலைமை ஆசிரியருக்கு 6 மாதம் சிறை
கோவில்பட்டி சாலைப்புதூர் அருகே உள்ள மஞ்சு நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45). இவர் ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜம் இந்து நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அதே பள்ளியில் ஒட்டநத்தத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி சுதா (45) இருவரும் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுதாவிடம் ராதாகிருஷ்ணன் ரூ.10 லட்சம் கடனாக வாங்கியுள்ளார்.
தான் வாங்கிய கடனுக்கு ராதாகிருஷ்ணன் 4.2.2023 தேதியிட்ட தலா ரூ.5 லட்சத்துக்கான 2 காசோலைகளை சுதா தம்பதியரிடம் கொடுத்துள்ளார். இந்த காசோலைகளை சுதா வங்கியில் செலுத்திய போது 9.2.2023-ல் பணம் இல்லை என திரும்ப வந்துள்ளது.

இதையடுத்து கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் சுதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்த், ராதாகிருஷ்ணனுக்கு 6 மாத சிறை தண்டனையும், 9 சதவீத வட்டியுடன் ரூ.10 லட்சத்தை சுதாவுக்கு திருப்பித் தர வேண்டும் என உத்தரவிட்டார்.







