நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களில் நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார்.
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1998) தமிழ்நாடு சட்டம் 30/2025-60T மூலம் திருத்தப்பட்டவாறான பிரிவு 37(1) (I a) ன் படி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கு 1.7.2025 முதல் 17.7.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இதனிடையே, மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்தும் தொடர்புடைய பொது நல சங்கங்களிடமிருந்தும் விண்ணப்பம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளை (17.7.2025) நீட்டித்து வழங்கும் படி வரப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து 31.7.2025 வரை கால நீட்டிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வசித்து வரும் தகுதியான மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகளின் படி தொடர்புடைய பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆணையாளரிடம் 31.7.2025 அன்று மாலை 3 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.







