கொலையை தடுத்து உயிர் காத்த தூத்துக்குடி போலீசார்: டிஜிபி பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு கொலையை தடுத்து நிறுத்தி, காயமடைந்தவரை காப்பாற்றிய சாதனைக்காக டி.ஜி.பி.சங்கர்ஜிவால் நேரில் பாராட்டினார்.
கடந்த டிசம்பர் 27 அன்று திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் உள்ள முக்காணி பகுதியில் குடும்ப தகராறில் சுயம்புலிங்கம் (38) என்பவர் மீது அவரது உறவினர்களான நாராயணன் (38) மற்றும் மாரியப்பன் எனும் பெரிய முண்டன் (38) ஆகியோர் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்
அப்போது ரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் பாஸ்கரன், தலைமை காவலர்கள் குமரேசன், ராஜபாண்டியன் ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுத்தனர். தலைமை காவலர் ராஜபாண்டியன் தனது ஹெல்மெட்டை ஆயுதமாக பயன்படுத்தி தாக்குதல் நடத்தியவர்களை சமாளித்தார்.
குமரேசன் தனது உடல் பலத்தை கொண்டு தாக்குதல் நடத்தியவர்களை வீழ்த்தினார். போலீசாரின் துரித நடவடிக்கையால் ஒரு கொலை தடுக்கப்பட்டது. அத்துடன் காயமடைந்த சுயம்புலிங்கம் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்(டி.ஜி.பி.) சங்கர்ஜிவால் சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழச்சியின் போது காவல்துறையை சேர்ந்த 3 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் சிறப்பு வெகுமதி வழங்கி கவுரவித்தார்.







