கோவில்பட்டியில் மாணவர்களுக்கு சிறுதானிய உணவு தயாரிப்பு பயிற்சி


கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமை படை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை சார்பில் பாரம்பரிய சிறுதானிய உணவுத் தயாரிப்பு பயிற்சி முகாம் கோவில்பட்டி லட்சுமி மில் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
சிறுதானியங்களிலிருந்து உணவு தயாரித்தல், காகித பை தயாரித்தல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
சிறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் கண்காட்சியில் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கல்வி மாவட்ட இடைநிலைக்கல்வி அலுவலர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்டக் தொடக்க கல்வி அலுவலர் பாஸ்கரன், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி முகாமை கோவில்பட்டி வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகராஜ் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறுதானித்திலிருந்து தயாரிக்கப்பட்ட தினைபுட்டு, ராகி இடியாப்பம், சாமை கார கொழுக்கட்டை வரகு பொங்கல், கருப்பு கவுனி அரிசி அல்வா, குதிரைவாலி இனிப்பு அடை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.
பசுமைப்படை மாணவர்களுக்கு சிறு தானிய உணவுகள் தயாரிப்பு பயிற்சியை கோவில்பட்டி ஆஸ்கார் கேட்டரிங் நிறுவனத்தினர் அளித்தனர். சுற்றுச்சூழல் ஆர்வலர் சுரேஷ்குமார் மாணவர்களுக்கு காகித பை தயாரிப்பு பயிற்சி அளித்தார்.
வனவர் அழகர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் இளம்புவனம் அரசு உயர் நிலைப்பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் இராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள 25 பள்ளிகளில் இருந்து சேர்ந்த 250 பசுமைப்படை இயக்க மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
