நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். இவருக்கு வயது 58. இவர் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 14ம் தேதி அதிகாலை அவர் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களுக்கு ஆயத சப்ளை செய்த மேலும் இரண்டு பேரையும் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.சல்மான் கானை கொலை செய்ய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி தர வேண்டும் என்று மர்ம நபர்கள், மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
அந்த செய்தியில் கூறியிருப்பதாவது: லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வந்து, சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால், ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். கொடுக்க தவறினால், பாபா சித்திக்கை விட சல்மான் கானின் நிலை மோசமடைந்துவிடும். இந்த அச்சுறுத்தலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சல்மான் கான் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பின்றி எங்கும் செல்ல வேண்டாம் என்றும் போலீசார் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
சல்மான் கான் கடந்த 1998 ஆம் ஆண்டு கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வகை கருப்பு மான் ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பிஷ்னோய் சமூக மக்களால் வணங்கப்படுகிறது.
கருப்பு மானை வேட்டையாடிய விவகாரத்தில் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து லாரன்ஸ் பிஷ்னோய் குழு அவருக்கு மிரட்டல் விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







