குறுக்குசாலையில் பொறியியல் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ; அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு
தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழக சார்பு அணிகளின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் வருகிற 16ம் தேதி காலை 10 மணி அளவில் குறுக்குச் சாலையில் உள்ள கீதாஜீவன் கலை, அறிவியல் கல்லூரியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற இருக்கிறது.
இப்போட்டியில் இளங்கலை, முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ‘தொழில்நுட்பக் கல்விக்கு தோள்கொடுத்த கலைஞர்’ `தொழில் துறையை உயர்த்திய தமிழினத் தலைவர்’, `திராவிட மாடலும் திறன் மிக்கக் கல்வியும்’, `தெற்குச் சூரியன்’, `கலைஞரும் தமிழும் ‘ஆகிய 5 தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும்.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000/-, இரண்டாவது பரிசாக ரூ.5,000/-, மூன்றாம் பரிசாக ரூ.3,000/- ரொக்கப்பரிசும், கேடயமும் வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மண்டல அளவில் நடைபெறும் போட்டியிலும், மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலும் நடைபெறும் பேச்சுப் போட்டியிலும் பங்கு பெறலாம். மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு பெறும் மாணவருக்கு பரிசுத் தொகையாக ரூ.5,00,000/- மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியானது தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் அன்பழகன் தலைமையில் மாநகர, மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. மாநகர தி.மு.க. , பொறியாளரணி அமைப்பாளர் ரூபன் நன்றி கூறுகிறார். போட்டியை துவக்கி, வெற்றி பெறும் மாணவர்களுக்கு நான் (கீதா ஜீவன்) பரிசுகள் வழங்கிட இருக்கிறேன்.
மேலும் இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில பொறியாளரணி துணை செயலாளர் பிரதீப் மற்றும் கழக நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள். எனவே இந்நிகழ்ச்சியில் இளங்கலை, முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று போட்டியில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







