கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 6 -ந்தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்ட 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உப்பு காற்றில் சேதமடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசும் பணி நடப்பது வழக்கம்.
அதன்படி ரூ.1 கோடி செலவில் சிலை பராமரிப்பு பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி தொடங்கியது. சிலையை சுத்தம் செய்து கலவை பூசும் பணி நடந்தது. பின்னர் வாக்கர் எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது.
இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரமும் பிரிக்கப்பட்டு விட்டது. எல்லா பணிகளும் நிறைவடைந்து புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.
ரசாயன கலவை பூச்சு காரணமாக கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில், வரும் 6-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.







