கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இலுப்பையூரணி மக்கள் முற்றுகை
கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கார்த்திகை செல்வி சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையில், சண்முக நகர் மற்றும் பழந்தோட்ட நகர் பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அந்த அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சீனிவாசனிடம், ரேஷன்கடை கட்ட நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட அவர், இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.








