காரில் கடத்திய 1,000 கிலோ குட்கா பறிமுதல்- டிரைவர் கைது

:பெங்களூருவில் இருந்து நெல்லைக்கு காரில் குட்கா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கயத்தாறு சுங்கசாவடி பகுதியில் வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக மொத்தம் 1,000 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரை ஓட்டிவந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கோவில்பட்டி அருகே கலிங்கப்பட்டியை சேர்ந்த சுடலை காந்தி (வயது 35) என்பதும், பெங்களூருவில் இருந்த நெல்லை ரெட்டியார்பட்டிக்கு குட்காவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
கடத்தி வந்த குட்காவின் மதிப்பு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். இதைத்தொடர்ந்து டிரைவர் சுடலை காந்தியை கைது செய்த போலீசார் அவர் ஓட்டிவந்த கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
