கோவில்பட்டி கோட்டத்தில் சாலை பணியாளர்களுக்கு 2 மாத ஊதியம் கேட்டு 24ந் தேதி ஆர்ப்பாட்டம்;சங்க கூட்டத்தில் முடிவு

கோவில்பட்டி கோட்ட நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் சாலைப்பணியாளர்களுக்கு 2 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஜூன் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று கோவில்பட்டி பயணியர் விடுதியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரணிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து, இணை செயலாளர் துரைசிங்கு, துணைத் தலைவர் செல்லச்சாமி, செயலாளர் கிளட்வின், மாநில செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் பிரான்சிஸ், மாவட்ட செயலாளர் உமாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட பொருளாளர் திருமலை நன்றி கூறினார் .

கூட்டத்தில், தமிழக அரசு சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பராமரிப்பு தூத்துக்குடி கோட்டத்தில் இருந்து பிரித்து கோவில்பட்டியை கோட்டமாகவும், எட்டயபுரத்தை உட்கோட்டமாகவும் அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள அலுவலர்களுக்கும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எட்டயபுரம் உட்கோட்டத்தில் உள்ள சாலைப் பணியாளர், சாலை ஆய்வாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் கடந்த இரண்டைரை மாதமாக ஊதியம் வழங்கப்படாததை தமிழக அரசு கவனத்துக்குகொண்டு செல்லும் வகையில் ஜூன் 24-ம் தேதி மாலை 5.30 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

