கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு கோட்டாட்சியரிடம் மனு


கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் நிரந்தரமாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பகுதியினர் இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் திரண்டு வந்தனர்.

கோட்டாட்சியர் மகாலட்சுமியை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் இசக்கிராஜா, தேவர் சமூக நலச்சங்க செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது :-
கோவில்பட்டி கதிரேசன் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள வீரவாஞ்சி நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். வீரவாஞ்சி நகர் பகுதிகளில் நிரந்தரமாக குடியிருந்து வரும் பொதுமக்களிடம் கோவில்பட்டி நகராட்சியால் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது.

மேலும், மின் இணைப்பு, சாலை, கழிவு நீர் வடிகால், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வசதிகள் மற்றும் குடும்ப அட்டைகள் என அனைத்து வசதிகளும் அரசு நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் வீரவாஞ்சி நகர் பகுதியானது, கோயிலுக்கு சொந்தமான நிலம் என்று கூறி அங்கு வசிக்கும் மக்களுக்கு தற்போது வரை அரசால் பட்டா வழங்கப்படவில்லை. பட்டா வழங்கப்படாததால் வீரவாஞ்சி நகரில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு சட்டப்படியான அங்கீகாரம் ஏதும் இல்லை.

கோவில்பட்டி நகராட்சியில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாயிலாக பெறப்பட்ட தகவலில் வீரவாஞ்சி நகர் பகுதி மலை புறம்போக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையிடம் கடந்த 18.3.2021, 3.5.2021 ஆகிய தேதிகளில் வீரவாஞ்சி நகர் பகுதியில் உள்ள கோயில் நிலங்கள் குறித்த தகவல்கள் கோரப்பட்டது. அதற்கும் எந்தவொரு பதிலும் அளிக்காமல் அறநிலையத்துறை மவுனம் காத்து வருகிறது.

பட்டா இல்லாத காரணத்தினால், வீரவாஞ்சி நகரில் உள்ள சொத்துக்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்ய முடிவதில்லை. நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு கட்டிட அனுமதி கோரி நகராட்சியில் விண்ணப்பித்தால் அனுமதி தரப்படுவதில்லை.
வீரவாஞ்சி நகரில் உள்ள நிரந்தர வணிக கட்டிடத்தில் தொழில் செய்யும் இளைய தலைமுறை மக்கள் சட்டப்படி தொழில் உரிமம் பெற முடிவதில்லை. அவசர காரணங்களுக்காக வங்கிகளிலோ, கூட்டுறவு கடன் சங்கங்களிலோ பொதுமக்களின் நிரந்தர குடியிருப்பு கட்டிடத்தை அடமானம் வைத்து கடன் கூட பெற முடிவதில்லை.
பேரிடர் ஏதும் நிகழும் காலத்திலும் நிவாரணம் பெற சட்ட ரீதியான பாதுகாப்பு வீரவாஞ்சி நகர் பொதுமக்களுக்கு இல்லை. வீரவாஞ்சி நகர் பொதுமக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமை மூலத்தை சட்டப்படி நிரூபிக்க முடிவதில்லை. எனவே, வீரவாஞ்சி நகர் பகுதியில் நிரந்தரமாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்,
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்
