பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

தமிழ் சினிமாவில் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ‘ஆண் பாவம்’ படத்தில் வி.கே. ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி.

சிவகங்கை அருகே கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரை ஆண் பாவம் படத்தின் மூலம் பாண்டியராஜன் அறிமுகப்படுத்தினார். நாட்டுப்புற பாடகியான இவர், கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.
ஆண் பாவம் படத்திற்கு பின் கோபாலா கோபாலா, ஆயுசு நூறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கொல்லங்குடி கருப்பாயி கடைசியாக இயக்குநர் சசிக்குமார் இயக்கிய ‘காரி’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கொல்லங்குடி கருப்பாயி அகில இந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராக 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்
தன்னுடைய கணவர், மகள் இறந்த நிலையில், கொல்லங்குடியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் இருந்த கொல்லங்குடி கருப்பாயிக்கு 1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கினார்.

வயது மூப்பு காரணமாக இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு கொல்லங்குடி கருப்பாயி மரணமடைந்தார். இவருக்கு வயது 99. அவருடைய இறுதிச் சடங்கு நாளை (ஜூன் 15) நடைபெறும் என அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லங்குடி கருப்பாயி மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

