விண்வெளி ஆய்வு மையத்துக்கு இந்திய வீரர் சுபான்ஹு சுக்லா உள்பட 4 பேர் 19ம் தேதி பயணம்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ககன்யான் என்ற திட்டத்தை 2027-ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதுதான் இதன் நோக்கம்.
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.

இதன்படி, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் ஜூன் 10-ம் தேதி ஏவப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்பம், வானிலை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணிக்க உள்ளனர்.
இந்நிலையில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஹு சுக்லா உள்பட 4 பேர் குழு வரும் 19ம் தேதி விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி பால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்ஸிஜன் கசிவை ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுதொடர்பான சமீபத்திய செய்திக்குறிப்பில், ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் உடனான சந்திப்பின் போது, பால்கன் 9 ஏவுதளத்தில் உள்ள சிக்கல் திறம்பட தீர்க்கப்பட்டுள்ளதாக குழுக்கள் தெளிவுபடுத்தியதாக இஸ்ரோ உறுதிப்படுத்தியது.

கடந்த 1984-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற ரஷியாவின் சோயுஸ் விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணித்தார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி நிலையம் செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, கடந்த 2006-ல் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 2024-ம் ஆண்டில் குழு கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த சூழ்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக சுபான்ஷு தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ரஷியாவின் யூரி காகரின் விண்வெளி மையத்தில் சேர்ந்து சிறப்பு பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
