மயிலாடுதுறை, சீர்காழியில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு;மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் கடந்த 11-ந் தேதி இரவு 44 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது.
இதனால் குடியிருப்புகள், விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்தது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பு முகாம்களில் தாங்க வைக்கப்பட்டனர்.
சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளன.
இந்த நிலையில் மயிலாடுதுறையில் மழை பாதித்த பகுதிகளை முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார்.
சீர்காழியை அடுத்த நல்லூரில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.







