நிலத்தகராறில் கோஷ்டி மோதல்; 10 பேர் மீது வழக்குப்பதிவு
கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம், நடுத்தெருவில் குடியிருப்பவர் கந்தவேல் (வயது 52). விவசாயி. இவர் தன்னுடைய நிலத்தில் டிராக்டர் வைத்து உழவு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து நிலத்தை சேர்ந்த கெங்காராஜ் (44) என்பவர் என்னுடைய நிலத்தில் எப்படி உழுதாய்? என்று கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
மாலையில் கந்தவேல் வீட்டுக்கு திரும்பி வரும்போது, கெங்காராஜ் உள்பட சிலர் சேர்ந்து அவரை கம்பால் தாக்கியதாகவும், தடுக்க வந்த மனைவி ரெங்கநாயகியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நாலாட்டின்புத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் கெங்காராஜ், கந்தசாமி (85), குருவம்மாள் (60), வரதராஜ் (60), சிறுவதி (35), ராகுல் (30) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோல கெங்காராஜ் கொடுத்த புகாரின் பேரில் கந்தவேல் (52), ரெங்கநாயகி (52), சுந்தர்ராஜ் (26), மாரிசாமி (26) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சுகாதேவி விசாரணை நடத்தி வருகிறார்.







