கவர்னருடன் விஜய் சந்திப்பு; மெஜாரிட்டியை நிரூபிக்க 2 வாரம் அவகாசம் கேட்டார்
சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக த.வெ.க., உருவெடுத்துள்ளது. இதற்கிடையே பெரும்பான்மையை நிரூபிக்க விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் விஜய் கோரி இருக்கிறார்.
இந்நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேக்கர் இன்று தமிழகம் வந்தார். அவரை தவெக தலைவர் விஜய், தன் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேருடன் சென்று சந்தித்தார். தங்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பட்டியல், காங்கிரஸ் தந்த ஆதரவு கடிதம் ஆகியவற்றை வழங்கி, ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார்.

ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. தவெக 108 இடங்களில் வென்றாலும், விஜய் 2 இடங்களில் வென்றதால் 107 என்பது தான் கணக்கு. தவெகவுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர்.
பெரும்பான்மை இல்லாவிட்டாலும், சட்டசபையில் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் தங்களை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கவர்னரிடம் விஜய் கோரியுள்ளார்.
தமிழக கவர்னரை சந்தித்து விஜய் உரிமை கோரியுள்ள நிலையில், கவர்னரிடம் இருந்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் 2 வாரம் அவகாசம் கேட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கவர்னர் எத்தனை நாட்கள் அவகாசம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.








