வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மிளகாய்பொடி தூவி 7 பவுன் நகை பறிப்பு; கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர், சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இரண்டு இளம்பெண்கள் மற்றும் ஒரு வாலிபர் குடிக்கத் தண்ணீர் கேட்டனர்.
மாரியம்மாள் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றபோது, அவரை பின்தொடர்ந்த 3 பேர்களும் , திடீரென அவரது கண்ணில் மிளகாய்ப்பொடியைத் தூவி தாக்கினர்.

இதையடுத்து, மாரியம்மாள் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 1 பவுன் மோதிரத்தை பறித்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது. இந்த சம்பவம் குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் கர்ணன் (25) என்பவர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் பதுங்கியிருந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் அடகு வைத்திருந்த நகைகள் ஒரு அடகுக் கடையிலிருந்து மீட்கப்பட்டன. மேலும் விசாரணை நடந்து வருகிறது,







