தேவர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் கூட்டாக அஞ்சலி
தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று நோக்கத்தில் தேவர் சன்னதியில் சபதம் மேற்கொண்டிருக்கிறோம் என ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து கூட்டாக அறிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் இணைந்து பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ஓ.பன்னீர்செல்வம் , செங்கோட்டையன் இருவரும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்தனர். பின்னர் பசும்பொன் செல்லும் வழியில் தினகரனைச் சந்தித்துப் பேசினர்.
ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் , ‘பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒன்றிணைக்கவே பசும்பொன்னில் இன்று இணைந்திருக்கிறோம். அதிமுக ஒன்றிணைய வேண்டும், மீண்டும் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று நோக்கத்தில் தேவரின் சன்னதியில் சபதம் மேற்கொண்டிருக்கிறோம். பசும்பொன்னில் இருந்து இந்த கூட்டணி தொடரும்’ என்றார்.
டிடிவி தினகரன் பேசுகையில், “2 ஆண்டுகளுக்கு முன்பே எங்களுடைய கூட்டணி இருக்கிறது. துரோகத்தை வீழ்த்துவதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வர தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க, ஓபிஎஸ் செங்கோட்டையன் எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். தேர்தலில் ஒன்றிணைந்து நாங்கள் பணியாற்றவிருக்கிறோம்.
துரோகத்தை வீழ்த்துவதற்குதான் அமமுக உருவாக்கப்பட்டது. நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள். அதனடிப்படையில் இணைந்திருக்கிறோம். சசிகலா இந்த கூட்டணியில் உறுதியாக கூட்டணியில் இணைகிறார். எங்களுடைய பணிகள் பற்றி வருங்காலத்தில் கொஞ்சம்கொஞ்சமாக தெரிந்துகொள்வீர்கள்” என்று கூறினார்.







