கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியில் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரி மனு
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணி நகர் அருகில் உள்ள டி.எல்.எஸ் நகரில் தொடர் மழையால் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சிந்தாமணி நகர் மற்றும் டி.எல்.எஸ் பொதுமக்கள் சார்பில் முருகன், சுபாஷ் சந்திரபோஸ், முத்தையா ஆகியோர் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஸ்டீபன் ரத்தினகுமாரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலுப்பையூரணி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணி நகர் செந்தூர்மஹால் முதல் டி.எல்.எஸ். நகரில் உள்ள ரேசன்கடை வரை உள்ள சாலை தொடர் மழையினால் சிதலமடைந்து சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் இவ்வழியாக குடிநீர் வாகனம், பால் வாகனம் உள்ளிட்ட இதர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் டி.எல்.எஸ் நகர் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதில் சிரமபடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைத்து தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.







