கரூர் சம்பவம்: தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை கரூரில் பிரசாரம் செய்த பொது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும்துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்வ்பம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மதியழகனை நேற்றுமுன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், மதியழகனுக்கு கடந்த 2 நாட்களாக அடைக்கலம் கொடுத்ததாக தவெக கரூர் நகர பொறுப்பாளர் மாசி என்ற பவுன்ராஜையும் (34) கைது செய்தனர்.
இந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருவரையும் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.







