ஒரு கட்சியின் தலைவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல் சென்றது இதுவரை பார்த்திராத ஒன்று; கனிமொழி எம்.பி விமர்சனம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி இன்று (30/09/2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 உயிர்கள் இழந்துள்ளனர்; மேலும் மருத்துவமனையில் பலர் சிகிச்சையில் உள்ளனர். பெற்றோர்கள், குழந்தைகள், அடுத்த தலைமுறை உயிர்களை இழந்துள்ளனர். சின்னச் சின்ன குழந்தைகளின் உயிர்கள் பறிபோய்விட்டன. அந்த குடும்பங்களின் கண்ணீரும் கதறலும் இன்றும் மறக்க முடியாததாக உள்ளது.
பத்து நிமிடம் வெளியே சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவர்கள், வீட்டிற்கு வரவில்லை என்றால் அவர்களின் பெற்றோர்களிடம் எப்படி ஆறுதல் சொல்ல முடியும் என்று எனக்கு தெரியவில்லை. மிகவும் சோகமான நிலையில்தான்தான் அங்கு உள்ளது.

அன்று இரவே முதலமைச்சர் நேரில் சென்று சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். உண்மையை கண்டறிவதற்காக ஒரு நபர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட துயர சம்பவம் நடத்திருக்கக் கூடாது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கருத்தில் கொள்ள வேண்டும்.
யாரையும் பழிசொல்ல கூடிய நேரமோ, யாரையும் குற்றம் சொல்ல கூடிய நேரமோ இது இல்லை. சமூக வலைத்தளங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த குடும்பங்களின் வலியும், காயமும், ரணமும் இன்னும் இருக்கிறது. தவறான தகவல்களைப் பரப்பி, புதிய வலிகளை உருவாக்கக்கூடாது.
பாதிக்கப்பட்ட மக்களோடு உடனடியாக நின்றது திமுக அரசாங்கம் தான். அடிப்படையில், எல்லோரும் மனிதர்களாக செயல்பட வேண்டும். விசாரணையில் நிச்சயம் உண்மை வெளிவரும். யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெளிவாக கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், மனிதர்களோடு மனிதராக நிற்க வேண்டும்.
ஒரு கட்சியின் தலைவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல்கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டுப் போவதோ அல்லது தன்னுடைய பாதுகாப்பை மட்டும் கருதுவதோ நிச்சயமாக நான் இதுவரை பார்த்திராத ஒன்று.
அவரால் இருக்க முடியவில்லை என்றால் அந்த இயக்கத்தைச் சார்ந்த அடுத்த கட்ட தலைவர்கள் இருந்திருக்க வேண்டும். மற்ற கட்சிகளில் அப்படிதான் இருக்கிறார்கள். இந்த சூழலைப் பார்க்கும்போது அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் பதிவு குறித்து, தற்போது மக்களுக்கு ஆறுதலாக இருப்பது பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். வன்முறையை தூண்டுவது போல் பேசுவது நிச்சயமாக உச்சகட்ட பொறுப்பின்மை. இன்னும் உயிரிழப்புகள் ஏற்படுத்தும் வகையிலான பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும். மக்களைப் பற்றி கவலை இல்லாமல், எப்படியாவது அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என நினைப்பது, மிக தவறான முன்னுதாரணமாகும்.
சிபிஐ விசாரணை வேண்டும் என யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் கேட்கலாம். தனிநபர் ஆணையம் நியமிக்கப்பட்டு இருக்கிறது. விசாரணை அடுத்த நாளே தொடங்கி இருக்கிறது.
இவ்வாறு கனிமொழி எம்.பி.கூறினார்,.







