கரூரில் 39 பேர் பலியான சம்பவம்:டிஜிபி அலுவலகம் விளக்கம்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று இரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர் .50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கரூரில் என்ன நடந்தது என்பது குறித்து டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கரூரில் 10,000 பேரை எதிர்பார்ப்பதாக கூறிதான் தவெக அனுமதி பெற்றது. இருப்பினும் முந்தைய கூட்டங்களை கருத்தில் கொண்டு சுமார் 500 காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நேரம் கேட்டிருந்த போதும், மதியம் 12 மணிக்கு விஜய் வருவார் என அக்கட்சியினர் அறிவித்துவிட்டனர். ஆனால், இரவு சுமார் 7.10 மணிக்குத்தான் அவர் வந்தடைந்தார். இதற்கிடையில், காலை சுமார் 11 மணியிலிருந்தே அவரை காண கூட்டம் கூட தொடங்கிவிட்டது.

தவெக கேட்டிருந்த உழவர் சந்தை மற்றும் லைட்ஹவுஸ் ரவுண்டானா, ஒதுக்கப்பட்ட வேலுச்சாமிபுரத்தைவிட குறுகலானவை.
விஜய் பேச ஆரம்பித்த போது காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளதாக நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது,







