தமிழக பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமன் பதவி ஏற்பு
தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றும் சங்கர் ஜிவால், தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெற்றனர்.
இதையொட்டி அவர்கள் 2 பேருக்கும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது.

சங்கர் ஜிவால், டி.ஜி.பி. பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தமிழக போலீஸ்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணியை பாராட்டும் விதமாக அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் இந்த புதிய பணியை தொடங்குகிறார்.
இந்த நிலையில், தமிழக போலீஸ்துறையின் நிர்வாக டி.ஜி.பி. வெங்கடராமன் தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் டி.ஜி.பி. அலுவலகத்தில் வைத்து சங்கர் ஜிவால் தனது பொறுப்புகளை பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவியேற்கும் வெங்கடராமனிடம் ஒப்படைத்தார்.
இதைபோல தமிழ்நாடு தலைமையக டிஜிபி வினீத் தேவ் வான்கடே தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.







